குறை கூறிய கிராமத்தவரை செருப்பால் அடிக்கப் பாய்ந்த பஞ்சாயத்துத் தலைவி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே கிராமசபை கூட்டத்தில் குறை கூறிய நபரை செருப்பால் அடிக்கப் பாய்ந்த பஞ்சாயத்துத் தலைவியைக் கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி ஓன்றியம் பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் சு.ராமலெட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டத்தை கூட்டினார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், தங்கள் பகுதியில் சாக்கடை கழிவு தேங்குவதால், பொதுமக்களை நோய் தாக்கும் ஆபத்து இருப்பதாகவும், உடனே சீர் செய்ய வேண்டும் என்றும் மைக்கில் கூறியுள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஊராட்சி தலைவர் ராமலெட்சுமி கோபத்துடன் தன் காலில் அணிந்திருந்த செருப்பை கையில் தூக்கியவாறு முருகானந்தத்தை அடிக்க பாய்ந்ததாக கூறி செங்கோட்டை போலீசில் முருகானந்தம் புகார் செய்தார். போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேசினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால், ஊராட்சி தலைவர் ராமலெட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முருகானந்தம் மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும், அது குறித்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென்காசி டிஎஸ்பி, செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, செங்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்