உதிரி பாகம் வாங்கியதில் மோசடி - மாஜி பஞ். தலைவருக்கு 2 ஆண்டு சிறை
அம்பாசமுத்திரம்: மின்சார உதிரி பாகங்கள் வாங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் பொட்டல் ஊராட்சி முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
சேரன்மகாதேவி ஓன்றியத்துக்கு உட்பட்ட பொட்டல் ஊராட்சியில் 2001ம் ஆண்டு முருகேசன் தலைவராக இருந்தார். பஞ்சாயத்து எழுத்தாளராக ஆறுமுகம் இருந்தார்.
ஊராட்சிக்கு மின் உதிரி பாகங்கள் வாங்கியது மற்றும் குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்ததாக இருவர் மீதும் குற்றசாட்டு எழுந்தது.
இதுகுறித்து அப்போதைய சேரன்மகாதேவி ஏபிடிஓ, கோட்டியப்பன் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கு அம்பை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி கலைவாணி விசாரித்து ஊராட்சி முன்னாள் தலைவர் முருகேசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். எழுத்தர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டார்.