12 பேரைக் கொன்ற அமெரிக்க டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
ஹூஸ்டன்: அமெரிக்காவின் போர்ட் ஹூட் ராணுவ தளத்தில் 12 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்ற அமெரிக்க ராணுவ டாக்டர், போலீஸ் அதிகாரியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போர்ட் ஹூட் ராணுவ தளத்தில் மனல மருத்துவராக இருந்தவர் மேஜர் நிடால் மாலிக் ஹசன். 39 வயதான இவர் நேற்று ராணுவ தளத்திற்குள் கண்மூடித்தனமாக இரு துப்பாக்கிகளால் சுட்டார்.
இதில் 12 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவை இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹசனின் வெறியாட்டத்தையடுத்து அதிரடிப் போலீஸார் உள்ளே வரவழைக்கப்பட்டனர். அதில் இருந்த ஒரு பெண் அதிகாரி, மாலிக் ஹசனை நான்கு முறை சுட்டு அவரது வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதில் படுகாயமடைந்தார் ஹசன். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது அவர் சான் அன்டோனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ஹசன் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஹசன் ஜோர்டானை பூர்வீமாகக் கொண்டவர். இருப்பினும் விர்ஜீனியாவில் பிறந்த அமெரிக்க பிரஜையாவார்.
அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தான், ஈராக்குக்கு அனுப்பியது தொடர்பாக இவர் கோபத்துடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சக ராணுவத்தினருடன் இவர் அடிக்கடி வாதிட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவரை விரைவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினருடன் சேருவதற்காக அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு விட்டார் ஹசன்.
ஏன் இவ்வாறு செய்தார் என்பதை அறிய அதிகாரிகள் காத்துள்ளனர். ஆனால் தற்போது ஹசன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications