டெல்லியில் சர்வதேச கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் மாநாடு
திண்டுக்கல்: 130 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழாவில் செங்கொடியை ஏற்றி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பேசியதாவது:
ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தான் உலகில் உள்ள பல நாடுகளை விடுதலையடையச் செய்தது. உலக நாடுகளில் சில நாடுகள் சோசலிச நாடுகளாக இன்றும் திகழ்கின்றன. ரஷ்யப் புரட்சியின் மேன்மைகளை முன்னெடுத்தும் செல்கின்றன.
இந்தியாவில் 3 மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் அந்த அரசுகள் திகழ்கின்றன.
ஏகாதிபத்தியத்தில் லாலி பாடுகிற டெல்லி ஆட்சி தரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, இடதுசாரி அரசுகள் மக்களுக்காக தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செயலாற்றி வருகின்றது.
இன்னும் ஒரு மாதத்தில் டில்லியில் 130 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.
நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிற சாதிய சக்திகளின் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்து ஆடி வருகிறது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வரதராஜன் பேசினார்.












Click it and Unblock the Notifications