'தினகரன் நிலம்'-மார்க். கம்யூ. கட்சியினர் கைது
சென்னை: நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் விவசாய அணியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் விவசாயப் பிரிவினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.
இந்தப் போராட்டம் தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இந் நிலையில் அந்தக் கட்சியினர் நேற்று மாலையே கைது செய்யப்பட்டுவிட்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக நீதிபதி பி.டி.தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிட வற்புறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே.வரதராஜன் தலைமையில் போராட்டம் நடைபெறவிருந்தது.
நேற்று மாலை 5 மணி அளவில் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழைப்பின் பேரில் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பி.சண்முகம், கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட தலைவர்கள் துளசிநாராயணன், கே.ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து 3, 4 மாவட்ட போலீசாரை குவித்து, பொது மக்களையும் மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகமான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை திரும்ப பெற்று குவிக்கப்பட்டுள்ள போலீசை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.