இலவச கேஸ் அடுப்பு: அமைச்சர்-மேயரை முற்றுகையிட்ட மக்கள்
நெல்லை: பாளையங்கோட்டையில், இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், மேயர், துணை மேயர் காரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகயிட்டனர். விழா ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளை மார்க்கெட் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 13வது வார்டு பகுதி மக்கள் 191 பேருக்கு தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் காஸ் அடுப்பு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக 13வது வார்டு பொதுமக்கள் காஸ் அடுப்பை வாங்குவதற்காக திரண்டிருந்தனர். விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மைதீன்கான், மேயர் ஏஎல் சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம் வந்தனர்.
அப்போது விழா நடைபெறும் இடத்தின் அருகே திரண்டு இருந்த 10வது வார்டு பொதுமக்கள் எங்கள் வார்டுக்கு அரசின் இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு எதுவும் வழங்கவில்லை. 13வது வார்டில் உள்ள சிலருக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் எங்கள் வார்டுக்கு எதுவும் வழங்காமல் 13வது வார்டு மக்களுக்கு காஸ் அடுப்பு வழங்க கூடாது என கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர், மேயர், துணை மேயர் காரை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அனைத்து வார்டு மக்களுக்கும் இலவச காஸ் அடுப்பு, கலர் டிவி கொடுக்கப்படும். உங்கள் வார்டுக்கு காஸ் அடுப்புகள் ஓதுக்கப்படவில்லை என அமைச்சர் மைதீன்கான் கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த மக்கள், எங்கள் வார்டுக்கு கொடுத்துவிட்டு 13வது வார்டுக்கு கொடுத்தால் போதும் என கூறினர்.
இதையடுத்து அமைச்சர் மைதீன்கான், மேயர், துணை மேயர் ஆகியோர் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவை ரத்து செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அமைச்சர் புறப்பட்ட சிறிது நேரத்தில் சிலர் காஸ் அடுப்பு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது உள்ளே சென்ற ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் தள்ளிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அவர்களை சாமாதனம் செய்தனர். இச்சம்பவத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications