நவ. 12ல் ஐ.நா. சிறுபான்மையினர் மாநாட்டில் பேசுகிறார் திருமாவளவன்!
சென்னை: ஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைப் பெற்றுள்ள ஒரே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தான் மட்டுமே என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது:
"சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்" என்கிற பொருளில் நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
சிறுபான்மையினரக் விவகாரங்களுக்கான சுயாதீன நிபுணர் என்ற பொறுப்பில் உள்ள மெக்டோனால்ட் அவர்களின் தனிப்பட்ட அழைப்பு இது. அந்த அழைப்பை ஏற்று அந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 12ம் தேதி பிற்பகல் அமர்வில் பேசிவதற்கேன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலித் மக்களுடைய பிரச்சனைகளை மையப்படுத்தி அதன் தொடர்பான கருத்துக்களை எடுத்துச்சொல்லவும், மத அடிப்படையிலும் மொழி அடிப்படையிலுமான சிறுபான்மை மக்களின் சிக்கல்கள் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாக கருதுகிறேன். இந்தியாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்தப் பெருமை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.