எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த மாணவர்கள்!
சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் வருவதைப் போல எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த 22 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஒரு ஆண்டுக்குத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த சினிமாக்களில் வரும் ஹீரோக்களை போல நடந்து கொள்ள மாணவர்கள் முயன்றால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
வேதாரண்யம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சுமங்கலா, புஷ்பா உள்பட 22 மாணவர்கள் டிப்ளமோ படிப்பு படித்து வந்தனர். 27.6.2008 அன்று அரசு பெண்கள் பள்ளியில் டிப்ளமோ தேர்வு நடத்தப்பட்டது. 22 பேரும் அங்கு தேர்வு எழுத சென்றனர்.
தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு நடக்கும் அறைக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எச்சரித்தனர். தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது பறக்கும்படையினர் தேர்வு அறைக்குள் வந்தனர்.
அப்போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விடைகளைப் பரிமாறிக் கொண்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். போலீஸ் அதிகாரிகள் மூலமாக மறுநாள் அந்த மாணவர்களுக்கு செல்போன் திருப்பி வழங்கப்பட்டது.
எஸ்.எம்.எஸ். மூலம் காப்பி அடித்த குற்றத்திற்காக அந்த மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஒரு ஆண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 22 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு 22 பேரின் கோரிக்கையையும் தள்ளுபடி செய்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், முன்னா பாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படங்களில் வரும் ஹீரோக்கள் கையாண்ட விதத்தை பிரதிபலிப்பதைப் போல உள்ளது இந்த மாணவர்களின் செயல்கள்.
சினிமா மூலம் மாணவர்கள் இந்த தவறுகளை செய்தார்களா, அல்லது வாழ்க்கையில் உண்மையாக நிகழக்கூடியதை சினிமாவில் சித்தரித்து காட்டப்பட்டதா? என்பது ஆச்சரியமாக உள்ளது. இத்தகைய செயலை மனுதாரர்கள் செய்தது அதிர்ச்சியாக உள்ளது.
ஆசிரியர் வேலைக்காக படித்தவர்கள் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் துப்பாக்கி வைத்தும், கத்தியை வைத்தும் மிரட்டி தேர்வு எழுதுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
தற்போது பின்பற்றப்பட்ட எஸ்.எம்.எஸ். போன்ற உயர் தொழில்நுட்ப முறையில் தேர்வு மேற்பார்வையாளர்களுக்கு பதற்றத்தை வேண்டுமென்றால் குறைக்கலாம். ஆனால் இதுபோன்று செயலில் ஈடுபட்டது தவறானதாகும்.
22 மாணவர்களும் அன்றைய தினம் பறக்கும்படை வரவில்லை என்றும், பறக்கும்படை செல்போன்களை கைப்பற்றியதாக கூறுவது உண்மையல்ல என்றும் கூறுவது தவறு. தங்களது கையெழுத்தை வெற்று பேப்பரில் வாங்கினார்கள் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறுவது தவறு.
இவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக அரசு முழுமையாக ஆராய்ந்துள்ளது. இப்படி ஒரு செல்போன் மூலம் காப்பி அடிப்பது தேர்வு வரலாற்றிலேயே நடந்ததில்லை.
மாணவர்களின் விடைத்தாள்களை பார்க்கும்போது தவறான விடைகளை அடித்துவிட்டு, அதன்மேல் சரியான விடையை எழுதியுள்ளனர். எஸ்.எம்.எஸ். மூலம் காப்பி அடித்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் உள்ள கருத்தை பின்பற்றி இவர்கள் காப்பி அடித்துள்ளதால் எதிர்கால நலன் கருதி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது செல்லும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications