விமானத்தில் கோளாறு-அழகிரி, 201 பேர் தப்பினர்
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 202 பேருடன் மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக தப்பினர்.
கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் உள்பட 192 பயணிகள், விமானிகள் மற்றும் பணியாளர்கள் 10 பேர் என 202 பேர் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் முன் சக்கரத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார். மேற்கொண்டு விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்படலாம் என்பதை அறிந்து, விமானத்தின் இயக்கத்தை அப்படியே நிறுத்தினார்.
இதையடுத்து விமானம் தொடர்ந்து ஓடாமல், இறங்கிய இடத்திலேயே ரன்வேயில் நின்றது. அதன் பின்னர் விமானத்தை ஒரு தள்ளு வாகனம் மூலம் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினர்.
இதையடுத்து 202 பேரும் கீழே இறங்கினர். விமானி சுதாரிப்பாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அனைவரும் அந்த விமானியை பாராட்டினர்.
இதே விமானம் மீண்டும் மலேசியா திரும்ப வேண்டியிருந்தது. இருப்பினும் பழுது பார்க்க வேண்டியிருந்ததால் அந்த சேவை ரத்து செய்யப்பட்டது.
அதில் செல்ல வேண்டியிருந்த 204 பயணிகளும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் இன்று மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications