ஃபியான் புயல் கரையைக் கடந்தது-மழை தொடரும்
சென்னை: மும்பை மற்றும் குஜராத்தை அச்சுறுத்தி வந்த ஃபியான் புயல் நேற்று மாலையில் மகாராஷ்டிர கரையைக் கடந்தது. இருப்பினும் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருப்பதால், கன மழை தொடரும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான ஃபியான் புயல் நேற்று மாலை அலிபாக், மும்பை இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மும்பை நகரில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அலுவலகங்களும் மதியத்திற்கு மேல் மூடப்பட்டன. கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மும்பையை தாண்டி மகாராஷ்டிர கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடந்தது. இதனால் மும்பையும், குஜராத்தும் தப்பின.
பின்னர் இந்தப் புயல் தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறி தற்போது குறைந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்து விட்டது.
இருப்பினும் தொடர்ந்து அங்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, வடக்கு மத்திய மகாராஷ்டிராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இது நாசிக் அருகே நிலையாக உள்ளது. இது வட கிழக்கில் மேலும் நகர்ந்து மேலும் பலவீனமடைந்து விடும்.
இதன் காரணமாக கொங்கன், மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா ஆகிய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பல இடங்களில் கன மழை மற்றும் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.
கடலும் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழத்தில் வெயில்...
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை அடியோடு குறைந்து விட்டது. பல பகுதிகளில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் வயல்களில் தேங்கிக் கிடந்த மழை வெள்ளமும் மெதுவாக வடியத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications