சட்டையைக் காணவில்லை என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறிய 'குடிமகன்'!
நெல்லை: காணாமல் போன சட்டையை கண்டுபிடித்துத் தரகோரி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று ஒரு லாரி கிளீனர் நல்ல குடிபோதையில் வந்து புகார் கொடுத்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குப் போய் புகார் கொடுக்க முயன்ற அவரை டி.ஆர்.ஓ. அலுவலக ஊழியர்கள் அடித்து விரட்டி விட்டனர்.
திசையன்விளையை சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் செல்லத்துரை. இவர் நெல்லை டவுனில் லாரி சர்வீஸ் ஓன்றில் கிளினராக வேலை செய்து வருகிறார்.
நேற்று பிற்பகலில் பணி முடிந்ததும் டாஸ்மாக் கடைக்குப் போய் வயிறு முட்டக் குடித்துள்ளார். பின்னர் கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
அப்போது படு தெளிவாக தனது சட்டையை கழற்றி கரையில் வைத்து விட்டு ஆற்றில் அரை மணி நேரம் உல்லாச குளியல் போட்டுள்ளார்.
குளித்து விட்டு கரைக்கு திரும்பிய போது அவரது சட்டையைக் காணோம். வெகுண்டு எழுந்த அவர் அருகில் இருந்த கமிஷனர் அலுவலகம் சென்றார்.
அங்கிருந்த போலீஸாரிடம், எனது சட்டையை கண்டிபிடித்து தர வேண்டும் என முறையிட துவங்கினார். அங்கு காவலுக்கு நின்ற போலீசாரிடம் அதிகாரிகளை பார்த்தே தீருவேன் என அடம்பிடித்தார். போலீசார் அவரை அலேக்காக தூக்கி சாலையில் கொண்டு போய் விட்டனர்.
ஆனாலும் ஓயாத அந்த குடிமகன், என் சட்டையில ரூ.125, ஒரு கட்டு பீடி, தீப்பெட்டி இருந்தது. அதை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும் என வருவோர், போவாரிடம் புலம்பினார். பின்னர் மீண்டும் கமிஷனர் அலுவலக்திற்குள் புக எத்தனித்தார்.
காவலுக்கு நின்ற போலீசார் மீண்டும் அவரை வெளியே அனுப்பி வைக்க நியாயம் கேட்டு குடிமகன் அருகில் இருந்த கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கு கலெக்டர் இல்லாததால் டிஆர்ஓ அறைக்கு சென்று மனு கொடுக்க முயன்றார்.
அங்கிருந்தவர்கள் உங்கள் புகாரை மனுவாக எழுதி கொடுங்கள் என குடிமகனிடம் தெரிவித்தனர். எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு கீழே உள்ள பிள்ளையார் கோயிலில் வைத்து அவர் மனு எழுதினார்.
கடமையாக உட்கார்ந்து எழுதிய மனுவை எடுத்து சென்ற அவரை டிஆர்ஓ அலுவலக ஊழியர்கள் கடுப்பாகி விரட்டி அடித்து விட்டனர்.
இதனால், எனக்கு நியாயம் கிடைக்கலையே என்று புலம்பியபடி அங்கிருந்து வெளியேறினார் அந்தக் குடிமகன்.












Click it and Unblock the Notifications