ஆரியங்காவில் மண் சரிவு: கொல்லம் சாலை சேதம்
தென்மலை: கேரள மாநிலம் ஆரியங்காவில் மண் சரிவு ஏற்பட்டதால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. மலை பகுதிகளில் ஆங்கங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா மாநிலம் ஆரியங்காவு உள்ளது.
இவ்வழியாக கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கன மழை காரணமாக ஆரியங்காவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு சேதம் ஏற்பட்டது. அருகே தென்மலை ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
சாலையில் செல்லும் வாகனங்களை ஓட்டி செல்பவர்களின் கவனம் சிறிது குறைந்தாலும் இப்பகுதியில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஊர்ந்தப்படி செல்கின்றன.
ஆரியங்காவை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கன மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. இவற்றில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
மேலும் தென்மலை நீர்த்தேக்கத்திற்கு காட்டாற்று வெள்ளம் வருவதால் அணை திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து சுமார் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அப்பகுதி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை சேதம் ஊட்டி, குன்னுரில் ஏற்பட்டதை போல் கேரள எல்லையிலும் ஏற்பட்டுள்ளது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.