கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை
நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி மற்றும் கொலையைத் தூண்டிவிட்ட கைதியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (42) ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
இந் நிலையில் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆஜராகி, ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை வயலில் புதைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசாரிடம் பாலையா கூறுகையில்,
நான் ஒரு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது அங்கிருந்த ராஜ்மோகனுடன் நட்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை ஆட்களை அனுப்பி துன்புறுத்தினார்.
இதனால் தன் கணவரை தீர்த்து கட்டிவிடுமாறு என்று என்னிடம் கூறினார். இந் நிலையில் பரோலில் வெளியே வந்த அவரை என் வீட்டுக்கு அழைத்துச் சென்று மது கொடுத்தேன்.
பின்னர் நானும் நண்பர்களும் இணைந்து உருட்டு கட்டைகளால் சரமாரியாகத் தாக்கி ராஜ்மோகனை கொன்றோம். உடலை ஆத்தூரில் வயலில் குழித்தோண்டி புதைத்துவிட்டோம் என்றார்.
இதையடுத்து ராஜ்மோகன் பிணத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக பாலையாவின் நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலையா பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.