கேரளாவில் லவ் ஜிஹாத் இல்லை-டிஜிபி உறுதி
கொச்சி: கேரளாவில் லவ் ஜிஹாத் நடைபெறுவது தொடர்பாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கேரள டிஜிபி ஜேக்கப் புன்னோஸ் மீண்டும் உறுதிபட கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களை மதம் மாற்றி தீவிரவாத செய்லகளுக்கு உதவியாக செயல்பட வைப்பதாக சர்ச்சை எழுந்தது. லவ் ஜிஹாத் என்று இதற்குப் பெயரும் இடப்பட்டது.
இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டது.
அதன்படி அவரும் கடந்த மாதம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் அந்த அறிக்கையில் ஆழம் இல்லை. மேலோட்டமாக தகவல்கள் உள்ளன. இது திருப்தி தரவில்லை. எனவே மீண்டும் தெளிவாக விசாரணை நடத்தி மூடி முத்திரையிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு நீதிபதி கே.டி.சங்கரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை டிஜிபி ஜேக்கப் புன்னோஸ் தாக்கல் செய்துள்ளார். அதில் லவ் ஜிஹாத் எனப்படும் நடவடிக்கைகள் நடைபெறுவதை உறுதி செய்யத் தேவையான வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுவது குறித்தும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்...
லவ் ஜிகாத் பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் அனுப்பியுள்ள அறிக்கைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் முரணாக உள்ளன. அதனால் இது பற்றி திட்டவட்ட முடிவுக்கு வர முடியவில்லை.
இருப்பினும் மோசடி வேலைகள் மூலம் மத மாற்றம் செய்ய சில குழுக்கள் மறைமுகமாக ஈடுபடுவது பற்றி சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கொடுத்துள்ள அறிக்கைகளில் 3 பேரின் அறிக்கைக்கு ஆதாரம் இல்லை. செவிவழி செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தரப்பட்டுள்ளது.
எனவே கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சந்தேகமற அறிக்கை தர இந்த 3 அறிக்கைகளும் உதவவில்லை. இந்த 3 அறிக்கைகளில் உள்ள தகவல்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார் டிஜிபி.
தனது அறிக்கையுடன் 18 மாவட்ட எஸ்.பிக்களின் அறிக்கைளையும் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் டிஜிபி.
இதையடுத்து இதுதொடர்பாக டிசம்பர் 1ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சங்கரன் உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.