சேலம், திருப்பூர், நாமக்கல், கோவையில் வன்முறை-பஸ் எரிப்பு

கொங்கு இளைஞர் அமைப்பின் மாநில அமைப்பாளர் தனியரசு தலைமையில் சுமார் 20 பேர் 5 கார்களில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஏ.காமாட்சிபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர்.
திருவிழாவை முடித்து விட்டு நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் உள்ள வனப் பகுதியில், அவர்களை 50 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது.
இதில், 2 கார்கள் சேதமடைந்தன. கரூர் மாவட்ட அமைப்பாளர் கார்வேந்தனை மட்டும் குறி வைத்து அக்கும்பல் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றது.
இதையடுத்து தனியரசு நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் தனியரசு தலைமையில் நிலக்கோட்டை நாலுரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் கார்வேந்தன் தாக்கப்பட்ட தகவல் பரவியதும், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டது.
15 பஸ்கள் மீது கல்வீச்சு...
சேலம், நாமக்கல், மாவட்டத்தில் பஸ்கள் உடைக்கப்பட்டது. சேலம் அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் வந்து கொண்டிருந்தது.
சேலத்தை அடுத்த காமலாபுரம் விமான நிலையம் அருகே அது வந்தபோது திடீரென பஸ் முன்பக்க கண்ணாடி மீது இருளில் மறைந்திருந்த 2 பேர் கல்வீசி தாக்கி விட்டு தப்பினர். இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இன்னொரு பஸ்சும் அதே இடத்தில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி பகுதியில் அரசு பஸ் மீது 4 பேர் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.
சிந்தாமணியூர் அருகே ஒரு அரசு பஸ் மீதும் குள்ளமுடையானூர் அருகே அரசு பஸ் மீதும் கல்வீசி தாக்கினர். இந்த பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து விழுந்தன. பஸ்கண்ணாடி உடைக்கப்பட்டதில் பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர்.
நாமக்கல் பஸ் நிலையத்திற்கு இரவு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அங்கிருந்த பஸ்கள் மீது அவர்கள் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
இதில், திருச்சியில் இருந்து சேலம் வந்த 2 அரசு பஸ்கள், சேலத்தில் இருந்து கரூர் சென்ற அரசு பஸ், ஈரோட்டில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ், நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் சென்ற அரசு பஸ் என 8 பஸ்கள் சேதமடைந்தன.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 15 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
திருப்பூரில் பஸ்சுக்குத் தீவைப்பு...
இந்த நிலையில், ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பஸ் நேற்று இரவு 11 மணி அளவில் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் முழு பஸ்சும் எரிந்து நாசமாகி விட்டது.
திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் சென்ற 2 பஸ்கள் மீதும் கல் வீசப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் திருப்பூர் தாராபுரம் ரோடு, புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் வந்து கொண்டிருந்த 6 அரசு பஸ்சின் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன. இதில் டிரைவர் ஆனந்தன் உள்பட 5 பயணிகள் காயமடைந்தனர்.
பஸ்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர்- தாராபுரத்தில் பதட்டம் நிலவுகிறது. தாராபுரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். வெளியூர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்தும் இன்று பஸ்கள் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. உடுமலை, திருப்பூர், பழனி மற்றும் கோவைக்கு செல்லும் பஸ்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸார் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications