பொன்சேகா பிரளயம்-கொழும்புவுக்கு ஓடும் பிரணாப்

அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில்,
தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது.
இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாளை டெல்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார். சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.
மேலும் ராணுவப் புரட்சி மூலம் நான் ஆட்சியைக் கவிழ்த்தால் அதை சமாளிக்க படைகளை அனுப்புமாறு ராஜபக்சே இந்தியாவிடம் கேட்டிருந்த விவரத்தையும் தனது ராஜினாமா கடிதத்தில் போட்டு உடைத்துவிட்டார் பொன்சேகா.
இந்த விஷயத்தை மத்திய அரசு மூடி மறைத்தாலும் இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
ராஜபக்சே, பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் முயலக்கூடும் என்கிறார்கள்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கேவே காங்கிரஸ் கட்சி டெல்லிக்கு அழைத்து ராஜபக்சேவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது, அவர் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. அப்படியே தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்றும் தெரிகிறது. ஆனால், இதை அவர் முக்கியமாகப் பேசப் போவதில்லை.
காரணம், ராஜபக்சே-பொன்சேகா மோதல் வெடிக்காத வரை அவர் இலங்கை செல்லும் திட்டத்திலேயே இல்லை. உண்மையிலேயே தமிழர் மறுகுடியமர்த்தல் விஷயத்தில் ஆர்வம் இருந்திருந்தால் எப்போதோ இலங்கைக்கு போயிருக்க வேண்டும்.
மீண்டும் எமர்ஜென்சி?:
இருக்கும் சிக்கல் போதாதென்று இலங்கை பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயகே, நாட்டில் மறுபடியும் அவசர கால சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பேசி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், தீவிரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தீவிரவாதத்தின் நிழல் நம்மை துரத்திக் கொண்டு வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பைக் கருதி மறுபடியும் நாட்டில் அவசர நிலையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
அவசர கால சட்டத்தின் அவசியம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தீவிரவாதத்தின் நிழலையும் முழுமையாக ஒழிக்க நமக்கு இந்த சட்டம் தேவையானதாக உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முழுமையாக ஆராய வேண்டும். வெள்ளவத்தை பகுதியில் சில புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளில் உள்ள புலித் தலைவர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்துத் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications