சங்கிலியை பறித்த திருடனை விரட்டி பிடித்த பெண்
சென்னை: கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்தார் ஒரு வீரப் பெண்.
அவரது பெயர் எலிசபெத். 26 வயதாகும் இவர் பட்டதாரிப் பெண். திருவள்ளூர் மாவட்ட் கடம்பத்தூரைச் சேர்ந்தவர்.
தனது ஊருக்குப் போவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது பெரம்பூரில் ரயில் நின்றபோது, அங்கு கடம்பத்தூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த எலிசபெத் வேகமாக இறங்கி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற ஓடினார்.
அப்போது திடீரென அவருக்கு குறுக்கே பாய்ந்த ஒரு நபர் எலிசபெத்தின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினான்.
இதனால் நிலை தடுமாறினார் எலிசபெத். ஆனால் அவருக்குள் ஆவேசம் வந்து படு வேகமாக அந்த திருடனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
நீண்ட தூரம் ஓடிய நிலையில் திருடன், ரயில் நிலையத்திற்கு வெளியே தப்புவதற்காக மதில் சுவரில் ஏற முயன்றான். ஆனால் விடாத எலிசபெத் அந்த நபரின் பேன்ட்டைப் பிடித்து கீழே இழுத்தார். இதனால் அந்த திருடன் அப்படியே பல்டி அடித்து கீழே விழுந்தான்.
அதன் பின்னர் பொதுமக்கள் ஓடி வந்து அந்த திருடனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மின்னல் வேகத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் பெரம்பூர் ரயில் நிலையம் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கியது.
அந்தத் திருடன் ரயில்வே எஸ்.பி. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டான். அவன் பிரபல திருடன் பிரகாஷ் என்பதும், ஓட்டேரியைச் சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.
அவனை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். வீரப் பெண் எலிசபெத்தை போலீஸாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
இதில் விசேஷம் என்னவென்றால், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு பெற்று பயிற்சியை முடித்துள்ளார் எலிசபெத் என்பதுதான்.