திருடனுக்கு துப்பாக்கி தந்த பெங்களூர் எஸ்.ஐ!
பெங்களூர்: பைக் திருடனிடம் கூட்டு வைத்துக் கொண்டு, அவனிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து விட்டு, திருட்டு பைக்கில் ஊர் சுற்றிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கூத்து பெங்களூரில் நடந்துள்ளது.
மைசூரில் சில நாட்களுக்கு முன்பு பாலாஜி என்ற பைக் திருடனை குற்றப் பிரிவு போலீஸார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவனுக்கு முஜாகித் என்ற கூட்டாளி இருப்பது தெரிந்தது. திருடிய வண்டிகளை முஜாகித் தான் விற்று பணமாக்கித் தருவது வழக்கம்.
இந்த முஜாஹித் பெங்களூர் ஜெயநகரைச் சேர்ந்தவர். இதையடுத்து மைசூர் போலீஸ் தனிப்படை பெங்களூர் விரைந்தது. ஜெயநகர் பகுதியில் சுற்றித் திரிந்த போலீஸார் ஒரு வழியாக முஜாஹித்தைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் சப் இன்ஸ்பெக்டர் சையத் தப்ரீஸ் என்பவருடன் அவருக்குப் பின்னால் அமர்ந்து போய்க் கொண்டிருந்த முஜாஹித்தைப் பார்த்து போலீஸார் குழப்பமடைந்தனர்.
ஒருவேளை, சையத் தப்ரீஸ், முஜாகித்தை முன்னதாகவே பிடித்துவிட்டாரா என சந்தேகித்தனர். ஆனால் முஜாஹித், தப்ரீஸுடன் படு ஜாலியாக பேசிக் கொண்டு போனதைப் பார்த்த போலீஸாருக்கு, தப்ரீஸ் மீது இப்போது சந்தேகம் வந்தது.
இதையடுத்து வேகமாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்திய மைசூர் போலீஸார், முஹாஜித்தை பிடித்து தங்களது வாகனத்தில் ஏற்றினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தப்ரீஸ், வேகமாக ஓடி வந்தார்.
எனது துப்பாக்கி முஜாஹித்திடம் இருக்கிறது என்று அவர் கூற மைசூர் போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் முஜாஹித்திடம் இருந்த தனது துப்பாக்கியை வாங்கிக் கொண்டு வேகமாக கிளம்பினார் தப்ரீஸ்.
பிடிபட்ட முஜாஹித்துடன் மைசூர் கிளம்பிய போலீஸார், அங்கு தங்களது உயர் அதிகாரிகளிடம் நடந்ததைக் கூறினர். அவர்கள் பெங்களூர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கமிஷனர் சங்கர் பித்ரி விசாரணை நடத்தினார். விசாரணையில், தப்ரீஸுக்கும், முஜாஹித்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், முஜாஹித்தின் விபச்சாரத் தொழிலுக்கு தப்ரீஸ் உதவியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தப்ரீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தப்ரீஸ்,
ஜெயநகர் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் பணியமர்த்தப்பட்டார். அவர் இதுவரை பதிவு செய்த எல்லா வழக்குகளும் அப்படியே கிடப்பில் உள்ளன.
இதை விட காமடி என்னவென்றால் அவர் இங்கு எஸ்.ஐ. ஆக வந்த பிறகுதான் ஜெயநகர் பகுதியில் பைக் திருட்டு அதிகமானதாக போலீசார் கூறுகின்றனர்.
முஜாஹித்துடன் எஸ்.ஐ சுற்றிக்கொண்டிருந்ததும் திருட்டு பைக்கில் தான் எனக் கூறிய போலீசார், முஜாஹித்தின் விபச்சாரத் தொழிலுக்கும் தப்ரீஸின் ஆசீர்வாதம் உண்டு என்றனர்.












Click it and Unblock the Notifications