கர்நாடக சபாநாயகர் ராஜினாமா-அமைச்சராகிறார்
ஹூப்ளி: ரெட்டி சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் அமைச்சராக பதவியேற்வுள்ளார். இதற்கு வசதியாக வரும் 16ம் தேதி தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.
சமீபத்தில் ரெட்டி சகோதரர்கள் ரூபத்தில் வீசிய புயலை சாதுரியமாக சமாளித்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டார் முதல்வர் எதியூரப்பா. இதுதொடர்பாக எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும், டெல்லியில் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான ஷோபா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். தற்போது சபாநாயகர் ஷெட்டார் அமைச்சராக்கப்படவுள்ளார். இதற்கு வசதியாக 16ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.
இதுகுறித்து ஷெட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நவம்பர் 16ம் தேதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 17 அல்லது 18ம் தேதி அமைச்சராரகப் பதவியேற்பேன் என்றார்.
பிரச்சினை வெடித்தவுடனேயே ஷெட்டாரை அமைச்சராக்குவதாக எதியூரப்பா அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஷெட்டார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த பேச்சுக்களின் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியேற்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட, தற்போது அதை ஏற்றுக் கொண்டுள்ளாராம் ஷெட்டார்.
மேலும், எதியூரப்பாவை நீக்க வேண்டும். அவரது இடத்திற்கு ஷெட்டாரைக் கொண்டு வர வேண்டும் என முன்னதாக கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர் ரெட்டி சகோதரர்கள். ஆனால் அதை கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications