ஜன. 18 முதல் 23 வரை நெல்லையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
நெல்லை நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஜனவரி 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
திருச்சி மண்டல ராணுவ கர்னல் சஞ்சீவ் குமார் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உடைய 18 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், தினமும் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும், அடுத்த நாள் உடல் தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்த ஆள்சேர்ப்பு முகாமிற்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், ஆள்சேர்ப்பு முகாம் நடத்த வசதியாக அதற்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயணடைய வேண்டும் என்றார்.