அமெரிக்காவின் திவாலான வங்கிகளில் தமிழக அரசியல் தலைவரின் பணம்!!
சென்னை: அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இதுவரை 123 வங்கிகள் திவாலாகின. அவற்றை அமெரிக்கா காப்பீட்டுத் துறை ஏற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திவாலான வங்கிகள் மூன்றில், தமிழ்நாட்டின் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரது பெரும் பணம் டெபாஸிட் செய்யப்பட்டதாம்.
இந்தப் பணம் தேர்தல் நிதியாக பெரும் தொழிலதிபர்களிடமும், கூட்டணி பேரத்திலும் திரட்டப்பட்டதாம்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்தத் தலைவர் டெபாஸிட் செய்த வங்கிகள் மூன்றுமே திவாலாகி, மூடப்பட்டு விட்டனவாம்.
இந்த விவரம் தெரியவந்ததும் ஆடிப்போன தலைவர், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் விட்டாராம். சில விவரமான கைத்தடிகள், 'அண்ணே கலங்காதீங்க... இன்சூரன்ஸ்ல பணம் கெடச்சிடும்' என்றும், இன்னும் சிலர், 'குறிப்பிட்ட அளவுதாண்ணே கிடைக்கும் முழுசா கிடைக்காது' என்றும் மாற்றி மாற்றி சொல்லி வருவதால், வெறுத்துப் போய் யாரையும் பார்க்கக் கூட மறுத்து விட்டாராம்.
கூட்டணி, தேர்தல் என்று யாராவது தேடி வந்தாலும், அப்புறம் பார்க்கலாம் போங்கய்யா என்கிறாராம்.
ரொம்ப பெரிய தொகையாத்தான் கோட்டை விட்டிருக்காரு!!