தலைமறைவான மதுரை நிதி நிறுவன அதிபர் சரண்
விருதுநகர்: தலைமறைவான மதுரை ஜெயம் நிதி நிறுவன அதிபர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியில் ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியவர் அசோக்குமார். இந்த நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் மாதாமாதம் வட்டி வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
இதை நம்பி பொதுமக்களும் பணத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கடந்த 6 மாதம் வரை நன்றாக செயல்பட்டு வந்தது. திடீரென்று இந்த நிறுவனத்தை நடத்தி வந்த இயக்குநர் அசோக்குமார் தலைமறைவாகிவிட்டார். நிறுவனத்தில் பூட்டு தொங்கியது. செக்குகள் அனைத்தும் வங்கியில் இருந்து திரும்பிவிட்டன.
முதலீடு செய்த பொதுமக்கள் கீரைத்துறை போலீசில் புகார் செய்தனர். தலைமறைவான அசோக்குமாரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் விருதுநகர் நீதிமன்றத்தில் அசோக்குமார் சரண் அடைந்துள்ளார்.