மரபணு சோதனைக்கு விரைவில் தனி சட்டம்
ஜெய்ப்பூர்: மரபணு (டிஎன்ஏ) பரிசோதனைக்காக தனி சட்டம் கொண்டுவரப்படும். இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தடய அறிவியல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் சிதம்பரம் பேசியதாவது:
நாட்டில் தொழில்நுட்பம் வளர்வது போல, குற்றங்களின் தன்மையும் நவீனமாகிக்கொண்டே போகின்றன. இதனால், வழக்கு விசாரணைகளில் முக்கிய பங்கு வகிக்கும் தடய அறிவியல் துறை சார்ந்த தன் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
குறிப்பாக, மரபணு பரிசோதனைக்கு தேவையான தனி சட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இத்துடன் மரபணு தகவல் வங்கியும் அமைக்கப்படும்.
தடயவியல் துறையை மேம்படுத்தவும், நவீன மயமாக்கவும் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மண்டல அளவில் 6 தடய அறிவியல் ஆய்வுக்கூடங்களும், 52 நடமாடும் ஆய்வுக் கூடங்களும் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 6 மத்திய ஆய்வுக் கூடங்களும் உள்ளன. வரும் 2010ம் ஆண்டை தடய அறிவியல் ஆண்டாகக் கடைபிடிக்கும் திட்டமும் உள்ளது.
ஆயுதக் கொள்கை மற்றும் ஆயுதச் சட்டங்கள் ஆகியவற்றில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications