மீண்டும் நிலச்சரிவு அபாயம் - ஊட்டியில் மக்கள் வெளியேற்றம்
ஊட்டி: மீண்டும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்திருப்பதால் ஊட்டியின் சில பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஊட்டியில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இதனால் ஏற்கனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் மீண்டும் பீதியில் ஆழ்ந்துள்ளது.
ஏற்கனவே அங்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மலை ரயில் ரத்து செய்யப்பட்டு விட்டது. சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மறுபடியும் அங்கு மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களி்ல் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களிடையே நிலச்சரிவு குறித்த பீதி ஏற்பட்டுள்ளது. இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
குறிப்பாக மலைச்சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஊட்டியில் சில பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
மேல் கோடப்பமந்து, மந்தடா, தலையாட்டு மந்து, அண்ணா நகர், கீழ் காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் மிகவும் சரிவான பகுதியில் சிலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இங்கு மழை அதிகரித்தால் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் அப்பகுதியினரை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
வாகனப் போக்குவரத்து தடைபட்டுக் கிடப்பதால் பலரும் தங்களது பொருட்களை கையிலும், தலையிலும் சுமந்து
சென்ற வண்ணம் உள்ளனர்.
இவர்களுக்காக நி்வாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பலர் தங்கினர். சிலர் தங்களது உறவினர் வீடுகளுக்குச் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்கள், ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் 2 ஆயிரத்து 548 பேர், 25 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குளிர்காலம் என்பதால் நிவாரண மையங்களில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் கம்பளிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
400 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவு...
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஊட்டி-குன்னூர் மெயின் ரோட்டில் எல்லநள்ளியில் இருந்து மைனலா செல்லும் சாலையில் 400 மீட்டர் நீளத்திற்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 2 பொக்லைன் எந்திரங்களுடன் சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications