தீயில் தூங்கும் தஞ்சை சாமியார்-குல்பர்காவில் பரபரப்பு
தீயை விழுங்கும் சாமியார்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த ராம்பாபு சுவாமிஜியின் செயல் படு வித்தியாசமாக இருக்கிறது.
தீக்குச்சியில் இருந்து பறந்து வரும் நெருப்பு நமது உடலில் பட்டாலே துடித்துப் போய் விடுவோம். ஆனால் இந்த சாமியார் தொடர்ந்து நான்கு மணி நேரம் தீயில் படுத்துத் தூங்குகிறாராம். அதுவும் முழுக்க உடை அணிந்து தூங்குகிறாராம். நம்ப முடியவில்லை அல்லவா. ஆனால் குல்பர்கா மாவட்டம், கனகாபூர் கிராமத்தில் சமீபத்தில் இவர் விசிட் அடித்தபோது இந்த அதிசயத்தை செய்தாராம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் கனகாபூர் கிராமத்தில் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது தீமூட்டி ஹோம் வளர்த்தார். பின்னர் அதில் படுத்துக் கொண்டு நான்கு மணி நேரம் தூங்கினாராம். மேலும், உலக சமுதாயத்தின் நலனுக்காக பிரார்த்தனையும் செய்தாராம்.
அந்த கூத்தின் விவரத்தைப் பார்ப்போம்...
இந்த சாமியார் வெறும் வாழைப்பழத்தையும், தண்ணீரையும்தான் சாப்பாடாக சாப்பிடுகிறாராம். விநாயகருடன் அவ்வப்போது பேசும் பழக்கமும் உண்டாம். உலக நலனுக்காக அவ்வப்போது ஹோமம் வளர்த்து அதில் படுத்துத் தூங்குவது இவரது வழக்கமாம்.
கனகாபூர் வந்த சுவாமிஜி அங்குள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு விசிட் அடித்தார். அங்கு ஹோம் வளர்த்து வருவதை அறிந்த அவர் தான் அதில் படுத்துத் தூங்கவும், பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்குமாறு கூறினாராம்.
அந்த ஹோம குண்டம் 3க்கு 3 அடி அளவு கொண்டதாகும். அவரது கோரிக்கையைக் கேட்ட பக்தர்கள் வாயை மூட முடியாமல் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கினராம். தகவல் அறிந்து மேலும் பல பக்தர்கள் குவிந்து விட்டனராம்.
பின்னர் தனது காவி உடையுடன் கண்களை மூடியபடி குண்டத்துக்குள் இறங்கினாராம் சாமியார். பின்னர் தொடர்ந்து நான்கு மணி நேரம் கண்களை மூடிய நிலையில் ஹோமத்துக்குள் படுத்துத் தூங்கினாராம்.
தமிழகத்தில் இதுபோல ஐந்து முறை செய்துள்ளாராம் சாமியார். அவரிடம் இறை சக்தி நிறைய இருப்பதாகவும், அதனால்தான் இவ்வாறு செய்ய முடிவதாகவும் பக்தர்கள் மெய் சிலிர்க்க கூறுகின்றனர்.
ஆனால் இதெல்லாம் சுத்த ஹம்பக், நிச்சயமாக முடியவே முடியாது. இதெல்லாம் பக்தர்களின் கற்பனையாக இருக்க வேண்டும் இல்லை, கண்கட்டி வித்தையை அந்த சாமியார் செய்திருக்க வேண்டும் என டாக்டர்கள், மனநல வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்க சொல்லுங்க, தீமூட்டி சோறு பொங்கலாம், தீயில் படுத்துத் தூங்க முடியுமா...???