காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி உடல் மீட்பு
குன்னூர்: குன்னூர் அருகே பாலத்தை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமியின் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மழையின் கோர தாண்டவத்தால் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 43 பேர் பலியானார்கள். காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
கடந்த வாரம் குன்னூர் அருகே கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் பாலத்தை கடக்க முயன்ற ராணி (வயது 36). அவரது மகள் ஜீவிதா (6) ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கிராம மக்கள் ராணியின் உடலை உடனே மீட்டனர். சிறுமியின் உடல் மட்டும் சிக்கவில்லை.
இந்த நிலையில் தூதூர் மட்டத்தில் காட்டுப்பகுதிக்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர். வன விலங்குகள் இறந்து கிடக்கிறதா என்று பார்த்த போது, மரக்கிளையில் சிறுமி ஜீவிதாவின் உடல் சிக்கியிருப்பது தெரிய வந்தது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்புதுறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications