எம்.இ. படித்து கொண்டே பி.இ. வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள்!
சென்னை: விதியை மீறும் வகையில், பி.இ படித்து முடித்த பின்னர் அதே கல்லூரியில் முழு நேர எம்.இ. படிப்பில் சேர்ந்து கொண்டு, பி.இ. மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 28 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பி.இ. பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பி.இ. படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களாக பணி புரியலாம். அல்லது பி.இ. பட்டதாரிகள் வேலை பார்த்துக் கொண்டு பகுதி நேரமாக எம்.இ.படிக்கலாம். ஆனால் ஒரே கல்லூரியில் பி.இ. பட்டதாரிகள் ஆசிரியராக முழுநேர ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே முழு நேர மாணவராக எம்.இ. படிக்கிறார்கள் என்று பல தரப்பில் இருந்து பல புகார்கள் வந்தன.
இதுகுறித்து சில மாணவர்கள் அனுப்பிய புகார்களில் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் எங்கள் கல்லூரியிலேயே எம்.இ.படிக்கிறார்கள். இது எப்படி என்று எழுதி இருந்தனர்.
அது மட்டுமல்லாமல் ஒரு கல்லூரியில் முழு நேர ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு கல்லூரியில் முழுநேர எம்.இ. மாணவராக படிப்பது போல வருகை பதிவு செய்யப்படுகிறது என்றும் புகார்கள் வந்தன. இவை இரண்டும் முறைகேடுகளாகும், விதி மீறலாகும்.
இது தொடர்பாக எம்.இ., எம்.டெக். படிப்பு நடத்தும் 70 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது 21 கல்லூரிகளில், ஒரே கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே அதே கல்லூரியில் எம்.இ. படித்தவர்கள் இருப்பது தெரிந்தது.
இதேபோல, 7 கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே வேறு கல்லூரியில் எம்.இ.படித்த மாணவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த 28 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 20-ந்தேதிக்குள் பதில் தரும்படி தெரிவித்துள்ளோம். இந்த 28 கல்லூரிகளிலும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தர 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.