பன்றிக் காய்ச்சலுக்கு நெல்லை பெண் நாகர்கோவிலில் மரணம் - தமிழகத்தில் 10வது மரணம்
நாகர்கோவில்: பன்றிக் காய்ச்சலால் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நாகர்கோவிலில் உயிரிழந்தார். இவரையும் சேர்த்து தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்திலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருமளவிலானோர் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல பலிகளும் நேர்ந்து வருகின்றன. இருப்பினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 5வது உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் எலிசபெத். 35 வயதான இவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுவரை எலிசபெத், வல்சலாகுமாரி, பெலிக்ஸ், பிரான்சிஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இங்கு பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 10 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். சென்னை வேளச்சேரியில் சிறுவன் ஒருவன் இறந்ததே முதல் பலியாகும்.
புதுச்சேரியில் மட்டும் இதுவரை 5 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். இந்த ஐந்து பேரும் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பலி எண்ணிக்கை 533 ஆனது...
இதற்கிடையே, இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 214 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 119 பேரும், ஆந்திராவில் 49 பேரும், குஜராத்தில் 45 பேரும், கேரளாவில் 25 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், டெல்லியில் 18 பேரும் தமிழகத்தில் 10 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், ஹரியாணா, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5 பேரும், உ.பியில் 3 பேரும், பஞ்சாபில் 2 பேரும், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஒரிசா, மிஸோரமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.