பறவைத் தாக்குதல் - விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம்!
டெல்லி: இந்த ஆண்டு பறவைத் தாக்குதலால் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.ஏற்கனவே பெரும் பொருளாதார சிக்கலில் அனைத்து விமான நிறுவனங்களும் தவித்து வரும் நிலையில், புதிதாக ஒரு கஷ்டமும் கூட வந்து நஷ்டத்தை கூட்டி விட்டுள்ளது.
இந்த ஆண்டு, பறவைத் தாக்குதலால் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 241 பறவைத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
பறவைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கிங்பிஷர்தான். அந்த நிறுவனத்தின் விமானங்களில் பறவைகள் மோதி சம்பவங்கள் 60 நடந்துள்ளன. அடுத்து ஜெட் ஏர்வேஸ் 49, ஸ்பைஸ்ஜெட் 30, இன்டிகோ 27, ஏர் இந்தியா 24, கோஏர் 7 என பறவைகள் தாக்கியுள்ளன.
பாரமவுன்ட் விமானத்தை ஒரே ஒரு பறவை மட்டுமே இந்த ஆண்டு தாக்கியுள்ளது.
இதேபோல சர்வதேச விமானங்கள் மீது பறவை மோதிய சம்பவங்களின் எண்ணிக்கை 34 ஆகும்.
பறவைகள் மோதலால் ஏற்பட்ட நஷ்டத்தில் இன்டிகோதான் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 87 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். அடுத்து கோ ஏர் நிறுவனத்திற்கு ரூ. 45.6 லட்சம் நஷ்டமும், ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 8.91 லட்சம் நஷ்டமும், ஸ்பைஸ் ஜெட்டுக்கு ரூ. 5.57 லட்சமும் நஷ்டம் ஏற்பட்டது.
கிங்பிஷர், ஏர் இந்தியாவின் நஷ்டக் கணக்கு தெரிவிக்கப்படவில்லை.