மனைவியை வைத்து சூதாடிய கணவர்!
ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன், தனது தம்பி துச்சாதனை அழைத்து திரவுபதியை இழுத்து வருமாறு உத்தரவிடுவான்.
இந்தக் கதை தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது ஆந்திராவில்.
சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது மனைவி உஷா. பாலாஜி சீட்டு விளையாட்டில் பித்துப் பிடித்துத் திரிந்தார்.
அப்பகுதியில் உள்ள கிளப்புக்குப் போய் சூதாடுவார். அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஸ்ரீராமுலு, வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஆடினார். ரூ. 35,000 வரை சூதாடி தோற்றார்.
இதையடுத்து சொத்து ஏதாவது இருந்தால் அதை வைத்து ஆடுமாறு ஸ்ரீராமுலு, வெங்கடேஷ் சகோதரர்கள் பாலாஜியிடம் கூறியுள்ளனர்.
கொஞ்சம் கூட மண்டையில் மசாலாவே இல்லாத பாலாஜி, எனது மனைவியைத் தவிர வேறு சொத்து இல்லையே என்று கூறியுள்ளார். அப்படியானால் மனைவியை வைத்து ஆடு, தோற்றால் கூட்டிக் கொண்டு போய் விடுவோம் என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் - ஒரு கணக்கோடு.
சரி என்று மனைவியை வைத்து சூதாடியுள்ளார் பாலாஜி. அதிலும் தோற்றார். இதையடுத்து உனது மனைவியை அழைத்து வா என்று வெங்கடேஷ் கூற, மறுத்துள்ளார் பாலாஜி.
இதையடுத்து வெங்கடேஷ், ஸ்ரீராமுலு இருவரும்
ஆகிய இருவரும பாலாஜி வீட்டுக்குச் சென்றனர். சமையல் கட்டில் இருந்த உஷாவை உனது கணவர் உன்னை வைத்து சூதாடி தோற்று விட்டான். எனவே எங்களுடன் வா என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த உஷா வர மறுத்து அலறியுள்ளார். ஆனாலும் விடாத அந்த சகோதரர்கள், உஷாவை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி தங்களது வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்து நின்ற பாலாஜி என்ன செய்வது என்று புரியாமல் விழித்துள்ளார்.
கிளைமேக்ஸ்...
இந்த நிலையில், வீட்டுக்குக் கூட்டி வந்த உஷாவை வெங்கடேஷ் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டார். விதம் விதமாக புடவை வாங்கித் தந்தார். நகை வாங்கித் தந்தார். அவருக்குப் பிடித்த உணவு வகைகளைக் கேட்டு கேட்டு அதை வாங்கிக் கொடுத்தார். அவரது உபசரிப்பில் மயங்கி்ப் போன உஷா, வெங்கடேஷுடன் செட்டிலாகி விட தீர்மானித்தார்.
மறுபக்கம் போலீஸில் புகார் கொடுத்தார் பாலாஜி. போலீஸாரும் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். ஆனால் வெங்கடேஷும், ஸ்ரீராமுலுவும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து உஷாவை போலீஸார் மீட்டனர். பாலாஜியிடம் ஒப்படைத்தனர். ஆனால் திடீர் திருப்பமாக, பாலாஜியுடன் வாழ விரும்பவில்லை. வெங்கடேஷுடனேயே வாழ ஆசைப்படுகிறேன் என்று அதிரடியாக கூறினார் உஷா.
இதை எதிர்பாராத போலீஸார் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாகியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications