ரெட்டி சகோதரர்களின் சுரங்கங்களில் பெரும் விதி மீறல்- சுப்ரீம் கோர்ட் குழு அறிக்கை
ரெட்டி சகோதரர்களின் சுரங்கத்தில் உள்ள விதி மீறல்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது. இந்தக் குழு ரெட்டி சகோதரர்களின் சுரங்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பெருமளவில் விதி மீறல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக இங்கு அனைத்துப் பணிகளும் நடந்து வருவதாகும் அது கடுமையாக சாடியுள்ளது. இங்கு நடந்து வரும் அனைத்துப் பணிகளையும் நிறுத்த வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்த பரிந்துரை அறிக்கையை இக்கமிட்டியின் தலைவர் ஜீவ்ராஜ்கா, வழக்கறிஞர் ஏ.டி.என்.ராவ் மூலமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..
ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் மேற்கொண்டு வரும் சட்டவிரோதப் பணிகள் குறித்து மாநில அரசு கண்டும் காணாதது போல உள்ளது வருத்தம் தருகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜனார்த்தன் ரெட்டிக்கும் இடையிலான தொழில்முறை நட்பே இதற்குக் காரணம். ஜனார்த்தன் ரெட்டி கர்நாடக மாநிலத்தில் அமைச்சராகவும் இருக்கிறார்.
ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான 3 இரும்புத் தாது சுரங்கத்திலும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதேபோல, பெல்லாரி இரும்புத் தாது நிறுவனம், ஒய்.எம். அன்ட் சன் மற்றும் அனந்தப்பூர் சுரங்க கழகத்திற்குச் சொந்தமான சுரங்கங்களிலும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த சுரங்கங்கள் குறித்து ஆந்திர அரசு இதற்கு முன்பு தெரிவித்த அனைத்துக் கருத்துக்களுமே தவறானவை, ஒரு தலைபட்சமானவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக அனந்தப்பூர் மாவட்ட வன அதிகாரி கொடுத்த அறிக்கையும் தவறான தகவல்களைக் கொண்டுள்ளன.
ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் செய்து வரும் தவறுகள், விதி மீறல்களை மூடி மறைக்க முயல்வதைப் போல உள்ளது ஆந்திர அரசின் அறிக்கை மற்றும் முயற்சிகள். இதை ஏற்க முடியாது. சட்டவிரோத செயல்களை ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு அங்கீகரிப்பதை போல இது உள்ளது..
ஒரு மாநில அரசு இந்த அளவுக்கு பொறுப்பில்லாமலும், அநீதியாகவும், ஒரு தலைபட்சமாகவும் செயல்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதில் கடுமையாக கூறப்பட்டுள்ளது.