சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஸ்கேன் மையம் குறித்து தகவல் தெரிவி்த்தால் ரூ 1000 பரிசு!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை அதிகரிக்க கராணமாக இருந்து வரும் ஸ்கேன் மையம் குறி்த்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ 1,000 சன்மானம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை கட்டுப்படுத்த கடந்த 1991 -ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் துவக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க, சுகாதாரத் துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை வெளிட்டுள்ள அறிக்கையில்,
பெண் சிசுவை கருவில் கண்டறிந்து, அதை சிதைக்கும் கொடுமையை ஒழிக்க முயற்சி மேற்கொண்டும் அது முழுமை பெற முடியவில்லை.
கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை அறிவதற்குத்தான் ஸ்கேன் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கூறுவோருக்கு, சட்டப்படி மூன்றாண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும், ஸ்கேன் மையம் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தால், 1,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.