சிகரெட் சாம்பல்.. பெண்ணுடன் மோதிய இளைஞர்கள்!
சென்னை: ஸ்டைலாக புகை பிடித்தபடி காரில் சென்ற இளம் பெண், சிகரெட் சாம்பலை வெளியில் தட்டி விட்டபோது அது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது பட்டது. இதையடுத்து அவர் காரை மறித்து நிறுத்தினார். அவருக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பானது.
இந்த பஞ்சாயத்து நடந்தது சிங்காரச் சென்னையில். கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் மார்க்கத்தில் நேற்று மாலை ஒரு அம்பாசடர் காரில் அழகான இளம் பெண் பயணித்தார். படு ஸ்டைலாக புகை பிடித்தபடி அவர் போனதைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.
ஒரு சிக்னலில் கார் நின்றது. அருகில் ஏராளமான வாகனங்கள். அப்போது அந்த ஸ்டைல் பெண் தனது கையில் இருந்த சிகரெட்டின் சாம்பலை காருக்கு வெளியே தட்டி விட்டார். அது அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த இளைஞர் மீது படவே அவர் கோபமடைந்து சத்தம் போட்டார்.
பதிலுக்கு அந்தப் பெண்ணும் போடா என்று கூறவே கடுப்பான இளைஞர் வாகனத்தை வேகமாக முன்னால் கொண்டு சென்று காரை மறித்து நிறுத்தி காரை விட்டு இறங்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறினார்.
அந்தப் பெண்ணும் வேகமாக இறங்கி வெளியே வந்தவர் இளைஞரை நோக்கி காச் மூச் என்று கத்தி சண்டையில் குதித்தார்.
வாய்க்கு வந்தபடி அவர் பேசியதால் அந்த இடத்தில் பெரும் கூட்டம் கூடி விட்டது. இளைஞருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். அனைவரும் அந்தப் பெண், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் அவரோ முடியாது என்று பிடிவாதமாக கூறி விட்டார். இளைஞரும், அவருக்கு ஆதரவாக திரண்டவர்களும் மன்னிப்பு கேட்காவிட்டால் நகர விட மாட்டோம் என உறுதியாக கூறியதால் அந்தப் பெண்ணால் காரை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார். இப்படியாக ஒரு மணி நேரம் ஓடி விட்டது. அந்தப் பெண்ணுக்கு வேலை போக நேரமாகிக் கொண்டிருந்ததால் படபடப்படைந்தார்.
மன்னிப்பு கேட்காவிட்டால் நகர விட மாட்டார்கள் என்று தெரிய வந்ததும், வேறு வழியின்றி மன்னிச்சுக்கப்பா என்று வேகமாக கையெடுத்துக் கும்பிட்டார். அதன் பிறகே காரை எடுக்க கூட்டத்தினர் வழி விட்டனர். அதன் பின்னர் அந்தப் பெண் சென்றார்.












Click it and Unblock the Notifications