தறிகெட்டு பாயும் தங்கத்தின் விலை... ஒரே நாளில் 152 அதிகரிப்பு!
சென்னை: தங்க விலை உயர்வு விஷயத்தில் இனி வரலாறு காணாத என்ற வார்த்தையையே மீடியா பயன்படுத்தத் தேவையில்லை. இந்த விஷயத்தில் இனி நாம் பார்க்கப் போவதெல்லாம் வரலாறு காணாத உயர்வுதான்.
ஒருகிராம் விலை ரூ 2 ஆயிரத்தை நெருங்க ஆரம்பித்துவிட்டது தங்கம் விலை. இந்த விலை உயர்வோடு சேர்த்தால் 20 நாள்களில் 1200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது ஒரு சவரனுக்கு. இந்தியாவில் வேறு எந்தப் பொருளின் விலையும் இப்படி தாறுமாறான உயர்வைச் சந்தித்ததில்லை, சமீப நாட்களில்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் தங்கம் விலை சற்று குறைவதுபோல போக்குக் காட்டியது. ஆனால் நேற்று அதை தூக்கிச் சாப்பிடுவதுபோல சவரனுக்கு ரூ 152 அதிகரித்துள்ளது.
இன்றைய விலை சவரன் ரூ. 13024. கிராம் விலை ரூ. 1628.
இந்த உயர்வு குறித்து தி நகர் தங்க நகை வியாபாரிகள் இப்படிச் சொல்கிறார்கள்:
"தங்கத்தின் விலை இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைமை அப்படி. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிராம் ரூ 2 ஆயிரத்தைத் தொட்டுவிடும். காரணம் சர்வதேச அளவில் தங்கத்துக்கு கடுமே் நெருக்கடி உள்ளது. இந்தியாவிலோ மக்களுக்கு அது கட்டாயத் தேவையாகிவிட்டது!"
நகைக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்!
வியாபாரிகள் இதுபோன்ற அனுமானங்களைத் தொடர்ந்து கூறிவருவதால், மக்கள் இப்போதே தங்கத்தை வாங்கிவிடலாம் என படையெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர். தி நகரின் பிரபல நகைக்கடைகளில் திங்கள் கிழமை நுழைவதற்கு இடமில்லாத அளவு கூட்டம் நிரம்பி வழிந்தது.
பண்டிகைக் காலமும், திருமண சீஸனும் சேர்ந்துவிட்டதால் விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் மக்கள் தங்கத்தை வாங்கித் தீரவேண்டிய கட்டாயத்திலிருப்பதைப் புரிந்து கொண்டாட்டத்தில் உள்ளனர் நகைக் கடைக்காரர்கள்.