தம்பதி கொலை-12 வயது மகன் சாட்சியம்: 4 பேருக்கு ஆயுள்
சென்னை: தனது தாய், தந்தையைக் கொன்றவர்களை அடையாளம் காட்டி 12 வயது சிறுவன் அளித்த வாக்குமூலத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், நான்கு பேருக்கு கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
ஈரோடு மாவட்டம், குள்ளம்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து கவுண்டர். இவரது மனைவி சரஸ்வதி. நிலத்துக்கு வேலி அமைப்பது தொடர்பாக இவர்களுக்கும், ராக்கியப்பன் கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1995ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நாச்சிமுத்து கவுண்டரும், சரஸ்வதியும் இரவில் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது மகன் ராமு (12) வீட்டில் இருந்தான்.
அப்போது ராக்கியப்பன், சுப்பிரமணியன், சோமராஜ், ஆறுமுகசாமி ஆகியோர் அரிவாளுடன் வந்து கணவன்-மனைவி இருவரையும் வெட்டி சாய்த்தனர். இதனால் இருவரும் மரணம் அடைந்தனர். ராமுவையும் தாக்கினார்கள். இதில் ராமு படுகாயம் அடைந்தான்.
இதுதொடர்பாக 4 பேர் மீதும் ஈரோடு முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கொலையை நேரில் பார்த்த 12 வயது சிறுவன் ராமு சாட்சியம் அளித்தான்.
விசாரணையின்போது, குற்றவாளியான சுப்பிரமணியன் தானாக முன்வந்து தாக்கியதை ஒப்புக்கொண்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் செசன்ஸ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். மைனரான ராமுவின் சாட்சியத்தை ஏற்கமுடியாது என்று கூறி, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 25.4.2002-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ராமுவின் வாக்குமூலத்தை நிராகரித்தது தவறு என்றும், மீண்டும் இந்த கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், வி.பெரியகருப்பையா ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர், ஏற்கனவே செசன்ஸ் கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், சம்பவத்தன்று கொலை நடந்தபோது ராமு வீட்டில் இருந்துள்ளான். சிறுவனை வெட்டியதால் மயக்கமடைந்துள்ளான்.
கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் படிப்படியாக மயக்கம் தெளிந்து 3 நாட்களில் நினைவு திரும்பியிருக்கிறான். இவ்வாறு நினைவு திரும்பியபிறகுதான் விசாரணை போலீஸ் அதிகாரி மருத்துவமனைக்குச் சென்று சிறுவனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முழுமையான நினைவில் சிறுவன் இருந்தான் என்று மருத்துவ சாட்சியம் உள்ளது என்பதை புலன் விசாரணை அதிகாரி பெற தவறிவிட்டார்.
சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக எடுக்க முடியாது. சுயநினைவில் கொடுத்த இந்த வாக்குமூலம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் சிறுவனை குறுக்கு விசாரணை செய்திருக்கலாம்.
போலீசில் ராமு கொடுத்த வாக்குமூலமும், நீதிமன்றத்துக்கு தந்த வாக்குமூலமும் ஒன்றாக உள்ளது. 13.12.95-ல் சிறுவனிடம் பெற்ற வாக்குமூலத்தை மறுநாள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை போலீஸ் அதிகாரி பொய்யான வாக்குமூலத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் சுயநினைவு வரும்வரை 5 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சிறுவன் கொடுத்த வாக்குமூலம் ஏற்கக் கூடியதுதான். ஆகவே, கீழ்கோர்ட் 4 பேருக்கும் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.