தேர்தல்-இலங்கை தூதரகத்தின் திடீர் தமிழர் பாசம்
சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இலங்கைத் துணைத் தூதரகம், நடமாடும் தூதரக சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் ஒப்புதலுடன் விரைவில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் அகதிகளுக்குத் தேவையான தூதரக சேவைகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிறப்பு, இறப்புப் பதிவு, போக்குவரத்து ஆவணங்களைப் பெறுவது உள்ளிட்டவற்றுக்காக தற்போது அகதிகள் முகாமில் தங்கியிருப்போர் சென்னைக்கு வர வேண்டியுள்ளது.
இது இந்த நடமாடும் தூதரக சேவை தொடங்கப்பட்ட பின்னர் அகன்று விடும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அகதிகள் முகாம்களைத் தேடி தூதரக அதிகாரிகள் வந்து செல்வார்கள்.
இந்த சேவை தொடர்பான திட்டம் தற்போது விரிவாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடங்கப்படும் என இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அந் நாட்டு தமிழர்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியாக இந்த சேவையை அந் நாட்டு அரசு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.