அணு ஒப்பந்தம்: இந்தியாவிடம் உறுதி தருகிறார் ஒபாமா- நம்பலாமா?
ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அதை நிறைவேற்ற ஒபாமா அரசு வேகம் காட்டவில்லை. இதனால் மத்திய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.
இந் நிலையில் ஒபாமா அதிபரான பின்னர் அமெரிக்காவில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மன்மோகன் சிங்.
நேற்று வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு 19 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இரு தலைவர்களும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது ஒபாமாவின் மனைவி மிச்செல், மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கெளர் ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் சம்பிரதாய முறைப்படி இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அதிபராக ஒபாமா பதவி ஏற்றபின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் முதல் வரவேற்பு நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்கை வரவேற்ற ஒபாமா, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்காவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.
ஒபாமா பேசுகையில், எனது தலைமையிலான ஆட்சியின் முதல் அதிகாரபூர்வ விருந்தினர் நீங்கள்தான். இந்த அங்கீகாரத்துக்கு நீங்களும் இந்தியாவும் முழுத் தகுதி பெற்றவர்கள். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலகப் பொருளாதார சரிவை மீட்டு பலப்படுத்த முடியும். அமெரிக்கா திட்டமிட்டுள்ள வருங்கால உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.
அணுசக்தி நாடான இந்தியா 'ஆசியாவின் தலைவர்'. (இதன்மூலம் இந்தியாவை அணு சக்தி நாடு என அமெரிக்கா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது).
அணுசக்தி நாடுகள் என்ற முறையில் உலகின் அதிபயங்கர அணு ஆயுத பரவலை நாம் தடுக்க முடியும் என்றார்.
கடவுள் ஆசி்ர்வதிக்கட்டும்-மன்மோகன் சிங்:
அடுத்துப் பேசிய மன்மோகன் சிங், தீவிரவாத ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒபாமாவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் 100 கோடி இந்திய மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவையும், இந்தியாவையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்றார்.
தனியே பேச்சுவார்த்தை:
இதையடுத்து ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீவிரவாதம், பொருளாதார ஒத்துழைப்பு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நிலைமை, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.
ஒபாமா இந்தியா வருகை:
அப்போது மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று, அடுத்த மாதம் இந்தியா வர ஒபாமா ஒப்புக்கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
ஒபாமா கூறுகையில், இந்தியா பொறுப்பான உலக சக்தியாக விளங்கும் ஒரு நாடு. பருவ நிலை மாற்றம் தொடர்பாக நாங்கள் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் அணுசக்தி நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியாவும் பங்கேற்கும் என்று நம்புகிறேன்.
இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றம் தடைகள் நீக்கப்படும்.
அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளையும் ஊக்குவிப்போம் என்றார்.
தொடர்ந்து ஒபாமா மன்மோகன் சிங்குக்கு விருந்தளித்தார். வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 300க்கு இந்திய-அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர்.