சிக்கலில் மாட்டும் நீதிபதியிடம் பேசிய அமைச்சர்!
டெல்லி: சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து தகவல் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய தகவல் ஆணையம் கோரியுள்ளது.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்தது தொடர்பான சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர் கிருபாசங்கருக்கும், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி நீதிமன்றத்திலேயே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த அமைச்சர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. பின்னர் அந்தப் பிரச்சனை அத்தோடு அமுக்கப்பட்டது.
இந் நிலையில நீதிபதியிடம் பேசிய அமைச்சர் யார், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற முழு விவரத்தையும் தெரிவிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்திடம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடு்த்த மனுதாரர் கேட்ட விவரங்களை அளிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் தகவல் ஆணையம் கோரியுள்ளது.
மனுதாரரின் கேள்விகளுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்கப்படும் என மத்திய தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications