For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சென்ட்ரல்-டிச.13ல் மின் ரயில்கள் ஓடாது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதால் டிசம்பர் 13ம் தேதி மின்சார ரயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரங்கள் விரிவுப்படுத்தும் பணி ரூ.3.57 கோடியில் நடைபெறுகிறது. 24 பெட்டிகள் நிற்கும் வகைகளில் பிளாட்பாரங்கள் விரிவுப்படுத்தப்படுகின்றன.

மேலும், 3, 4-வது நடைமேடை தவிர மற்ற நடைமேடைகளும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
நடைமேடை நீட்டிப்பு பணிகளுக்காக ரயில் பாதைகள், சிக்னல்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இதனால் டிசம்பர் 3, 8, 10, 13 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் வரும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்ட்ரலில் 1 முதல் 5 வரையிலான நடைமேடைகளுக்கான போக்குவரத்து டிசம்பர் 3, 10 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் டிசம்பர் 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இதனால் சென்ட்ரல் வரும், புறப்படும் ரயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் டிசம்பர் 3, 8, 10, 13 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் வழியாக செல்லும் நீண்ட தூர ரயில்களான ஆலப்புழை- தன்பாத் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- கோரக்பூர், கொச்சி- பாட்னா, யஸ்வந்த் பூர்-முசாபர்பூர், பெங்களூர்- கவுகாத்தி ஆகிய 28 ரெயில்கள் சென்ட்ரலுக்கு வராமல் பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும்.

டிசம்பர் 13-ந்தேதி சென்னை சென்ட்ரல், புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு வரும் ரயில் போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. காலை 9 மணிக்கு முன்னதாக வரும் ரெயில்கள் சென்ட்ரலுக்குள் அனுமதிக்கப்படும்.

அதன் பிறகு வரும் வெஸ்ட் கோஸ்ட், கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணத்திலும் திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் திருவள்ளூரிலும், திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆவடியிலும் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மறு மார்க்கமாக புறப்பட்டு செல்லும்.

அதேபோல லால்பாக், பினாக்கினி, சென்னை- பெங்களூர், பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்படும். மறு மார்க்கமாக அங்கிருந்து புறப்படும்.

திருப்பத்தூர்- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ், அரக்கோணம்- சென்ட்ரல் பாசஞ்சர் ஆகியவை இரு மார்க்கத்திலும் அன்று ரத்து செய்யப்படும்.

கிராண்ட்டிரங், சார்மினார், திருவனந்தபுரம், ஐதராபாத், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்பட மற்ற ரயில்கள் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக புறப்படும்.

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மின்சார ரயில்களில் சில சென்னை கடற்கரைக்கு திருப்பி விடப்படும்.

இவை தவிர காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 80 முதல் 100 வரையிலான மின்சார ரயில்கள் சேவை ரத்தாகலாம். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் வீதம் இந்த மார்க்கங்களில் இயக்கப்படும்.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.கே. குல்ரேஸ்தா கூறுகையில், சென்ட்ரலில் 3 நடைமேடைகள் நீட்டிக்கப்படுவதால் அதிக பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்த முடியும். 13-ந்தேதி சிக்னல்களை சரிபார்க்கும் பணி நடைபெறும்.

ரயில்களின் நேரம், பாதை மாற்றம், ரத்து குறித்து மாற்றங்கள் வரலாம். ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வரும். நடைமேடை நீட்டிப்பு, சிக்னல்கள் மாற்றுவதின் மூலம் பேசின்பாலம் சிக்னல் அருகே ரயில்கள் காத்து நிற்கும் நேரம் பெருமளவு குறையும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X