இடைத் தேர்தலில் பாமக போட்டியில்லை-யாருக்கு ஆதரவு?
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் பாமக போட்டியிடபோவதில்லை. அதே சமயம் அந்த தொகுதிகளில் யாருக்கு வாக்களிப்பது, எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிப்போம்.
நீதிமன்ற தீர்ப்புகளால் நடைபெறும் இடைத் தேர்தல்களைத் தவிர, பிற காரணங்களால் நடைபெறும் இடைத் தேர்தல்களில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சியே உறுப்பினரை நியமித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதை எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தேர்தல் நடைமுறைகளில் இதற்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கு எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
நேரம் குறைப்பு-குப்தாவுக்கே காரணம் தெரியாது:
இந் நிலையி் திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கே தெரியவில்லை.
வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால், இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 1 மணி நேரம் தாமதமாக அதாவது, காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடையும் என அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இது குறித்து குப்தா கூறுகையில்,
தேர்தல் நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நாங்கள் (தமிழக அதிகாரிகள்) எடுத்த முடிவல்ல. இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு.
அதே தேதியில் ஆந்திரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடக்கும் இடைத் தேர்தல்களுக்கும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேகாலயம் போன்ற மாநிலங்களில் காலையில் குளிர் அதிகமாக இருக்கும். அதனாலோ என்னவோ, தேர்தல் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
அதே நேர அளவையே மற்ற இடங்களுக்கும் கடைபிடிக்கலாம் என்று கருதியதால், வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் இதுதான் உறுதியான காரணமா என்று தெரியவில்லை என்றார்.
மேகாலயா போல தமிழகத்திலும் பனி பொழிகிறது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது போல!
ஓட்டு எண்ணிக்கை-கமிஷனுக்கு ஆன்லைனில் லைவ்:
இதற்கிடையே இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்டர்நெட் மூலம் ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இது குறித்து திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி துரை ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை இன்டர்நெட் ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அதற்காக திருச்செந்தூர் தொகுதி ஓட்டுக்கள் எண்ணப்படும் அங்குள்ள தனியார் கல்லூரியில், 14 மேஜைகளிலும் வெப்கேமரா, லேப்டாப் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் ஓட்டு எண்ணிக்கை ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அதை தேர்தல் அதிகாரிகள் பார்க்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்க்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications