மகாராஷ்டிராவின் கமாண்டோ படை 'போர்ஸ் ஒன்'
மும்பை: மும்பை நகரை தீவிரவாதத் தாக்குதலிலிருந்து காப்பதற்காக மகாராஷ்டிர மாநில அரசு உருவாக்கியுள்ள போர்ஸ் ஒன் கமாண்டோப் படை நேற்று முதல் தனது பணியைத் தொடங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பை நகரைக் காக்க தனியாக ஒரு கமாண்டோப் படை அமைக்கப்படும். அதற்கு போர்ஸ் ஒன்று பெயரிடப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
அதன்படி 256 வீரர்கள், அதிகாரிகளைக் கொண்ட அதி நவீன கமாண்டோப் படை அமைக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி. படையைப் போலவே இதுவும் அதி நவீனமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
போர்ஸ் ஒன் படை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அதன் கமாண்டோ வீரர்கள் நரிமன் பாயின்ட் முதல் செளபாத்தி வரை அணிவகுத்து நடைபோட்டனர்.
இந்த அணிவகுப்பைக் காண மெரைன் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கமாண்டோ வீரர்களை வாழ்த்தினர். மற்றும் உயர்ந்த கட்டடங்கள் மீதும் மக்கள் கூட்டம் நின்றிருந்ததைக் காண முடிந்தது. ஆண்களை விட பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் திரண்டு உற்சாகத்துடன் வீர்ரகளைப் பார்த்துக் கையசைத்தனர்.
போர்ஸ் ஒன் வீரர்களுக்கு என்எஸ்ஜி படையினர் பயிற்சி அளித்துள்ளனர். சில வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்களும் பயிற்சி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் அசோக் சவான் கூறுகையில், வியாழக்கிழமை முதல் போர்ஸ் ஒன் அமலுக்கு வந்துள்ளது. மும்பையை மிக சீரிய முறையில் இந்தப் படையினர் பாதுகாப்பார்கள். பிற படையினருடன் இணைந்து போர்ஸ் ஒன் படையினர் செயல்படுவர் என்றார்.
போர்ஸ் ஒன் படையின் தலைமையகம், வட மேற்கு மும்பையில், கோரேகான் பகுதியில் உள்ள ஆரே மில்க் காலனி வளாகத்தி்ல 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதன் தலைவராக காவல்துறை டிஐஜி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications