பேச்சுவார்த்தைக்கு வருமாறு வனவியல் மாணவர்களுக்கு அரசு அழைப்பு
சென்னை: வனவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வனத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, வனவியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனவியல் கல்லூரி மாணவர்கள் கடந்த 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஒரு குறிப்பிட்ட பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்க இயலாது என்று என்று கூறிவருகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வெளிநபர்களின் தூண்டுதலால், கல்லூரி உடைமைகளை சேதப்படுத்துதல், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று பிரச்சினைக்கு சுமூகத்தீர்வு காணவேண்டும் என்று அரசு தரப்பில் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.