அரசியல் வேண்டாம்- சச்சினுக்கு தாக்கரே மீண்டும் எச்சரிக்கை
மும்பை: அரசியல் களத்திற்கு வர சச்சின் டெண்டுல்கர் முயற்சிக்க வேண்டாம் என பால் தாக்கரே மீண்டும் சச்சினை வம்புக்கு இழுத்துள்ளார்.
மும்பை அனைவருக்கும் பொதுவானது என்று கூறிய சச்சினை சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பால் தாக்கரே அடங்குவதாகத் தெரியவில்லை.
நேற்று சேனா பவனில் நடந்த சிவசேனா கவுன்சிலர்கள் கூட்டத்தில் பால் தாக்கரே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சின் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். சச்சின் அரசியல் விஷயங்களில் தலையிடக் கூடாது.
கிரிக்கெட்டோடு அவர் நின்று விட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மும்பைக்கு யார் வர வேண்டும், யார் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அந்த உரிமை எங்களுக்குத்தான். சச்சினுக்குக் கிடையாது என்றார் பால் தாக்கரே.