For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுகிறாராம் பொன்சேகா

By Staff
Google Oneindia Tamil News

Fonseka
கொழும்பு: அதிபர் தேர்தலி்ல் தான் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சரத் பொன்சேகா. மேலும், அன்னப்பறவை சின்னத்தில் தான் நிற்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனவரி மாதம் 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுகிறார்.

ஆனால் ராஜபக்சே, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற எண்ணத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர் கட்சிகள் சார்பில் தனியாக ஒரு வேட்பாளர் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிடுவதை இன்று பொன்சோக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பொன்சேகா.

அப்போது அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுவேன்.

இருப்பினும் தனியாக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில் நான் தேர்தலி்ல் போட்டியிடவுள்ளேன். அன்னப் பறவை சின்னத்தின் கீழ் நான் தேர்தலில் நிற்பேன்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் அரசியல் தலைமைக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், இடம் பெயர்ந்த தமிழர்கள் கையாளப்படும் விதம் எனக்கு பெரும் வருத்தத்தையே தந்துள்ளது.

நான் ராணுவத் தளபதியாக இருந்தபோது கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டேன். அதேபோல மக்களுக்கு கூறப்போகும் உறுதிமொழிகளையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

ராணுவத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற அரசு முனைகிறது. இது கண்டனத்துக்குரியது.

வரைமுறையில்லாத அதிபர் பதவிக்கு மக்கள் ஆதரவு தரக் கூடாது. அதற்கு எதிராக இம்முறை அவர்கள் வாக்களிக்க வேண்டும். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சாசன சபையை உருவாக்குவேன். 17வது சட்ட திருத்தத்தை அமலாக்குவேன். நல்லாட்சியைத் தருவேன்.

நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். சவால்களை சந்திப்பது எனக்குப் பிடிக்கும்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிபர் ஆட்சி முறையை 6 மாதங்களில் ஒழிப்பேன். நாடாளுமன்றமே அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் உயர் அதிகார பீடமாக மாற்றப்படும் என்றார் பொன்சேகா.

அப்போது சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா கொலையில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று கேட்டபோது அதை பொன்சேகா மறுத்தார். என்னிடம் கூலிப்படையினர் யாரும் இல்லை என்றும் கூறினார்.

அப்படியும் விடாத நிருபர்கள், உங்களது மருமகன் ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதையும் பொன்சேகா மறுத்தார்.

மேலும், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால்தான் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா.

பொன்சேகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் தேர்தல் என்ற பொம்மலாட்டம் தொடங்கி விட்டது. போருக்குப் பின்னர் பெரும் கேள்விக்குறியாகி விட்ட வாழ்க்கையுடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தலால் என்ன நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X