வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் - தடுக்கத் தயாராகும் தமிழகம்
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகெங்கும் 1000க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசின் சுகாதாரத் துறை இறங்கியுள்ளது.
குளிர்காலம் வந்து விட்டதால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். தமிழகத்தில் இதுவரை 2300க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 1400 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 12 பேர் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
குளிர்காலம் வந்துள்ளதால் பெருமளவில் கூட்டம் கூடும் இடங்களில் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அதிக அளவில் கூட்டம் சேராமல் தடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பன்றிக் காய்ச்சலின் 2ம் கட்ட பரவல் இது எனக் கூறலாம். ஆனால் கடந்த முறையை விட இந்த முறை பன்றிக் காய்ச்சல் வைரஸ், சற்று வீரியம் கொண்டதாக இருக்கும். மேலும் கடுமையான அறிகுறிகளையும் அது வெளிப்படுத்துவதாக இருக்கும்.
எனவே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியம் என்றார்.
டிசம்பர் முதல் வாக்சீன்...
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் சோதனை ரீதியாக வரும் டிசம்பர் மாதம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொல்கத்தா, பெங்களூர், லூதியானா, புனே மருத்துவக் கல்லூரிகளில் இந்த தடுப்பு மருந்து எந்த அளவுக்கு பலன் உள்ளதாக இருக்கும் என்பது பரிசோதிக்கப்படவுள்ளது.
சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரீட்சார்த்த முறையில் இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படும். இந்த சோதனைக்கு உட்படும் நபர்களுக்கு இதற்கு முன்பு வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications