ஆந்திராவில் பந்த்-மாநிலம் ஸ்தம்பிப்பு: விஜயசாந்தி கைது

தனி தெலுங்கானா கோரி உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத் நகரில் சங்கா ரெட்டி பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் முன்பு நடிகை விஜயசாந்தி தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் தனி தெலுங்கான கோரிக்கை போராட்டம் மீண்டும் தீவிரமாகியுள்ளது. பல்வேறு இடங்களில் பஸ் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகி்ன்றன.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தல்லி தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்த விஜய்சாந்தி, கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதைக் கலைத்துவிட்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
சிறையில் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம்:
இந் நிலையில் கம்மம் புறநகர் பகுதியில் உள்ள தன்வைகுடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திர சேகரராவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதித்து வந்தனர். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று பந்த்:
சந்திரசேகரராவ் கைதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அழைப்பு விடுத்துள்ளதால் 10 மாவட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
மேடக், நிஜாமாபாத், அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், மெகபூப் நகர், ரெங்காரெட்டி, கம்மம், நல்கொண்டா மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஹைதராபாத்தில் பல பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுபள்ளது.
இந் நிலையில் இன்று 2வது நாளாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொண்டர்களும், மாணவர்களும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்,
ராமகுண்டத்தில் நகரசபை, தாசில்தார் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. செகந்திராபாத்தில் தனியார் பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.
சந்திரசேகரராவ் சுயநலவாதி: ரோசையா..
இந் நிலையில் ஆந்திர முதல்வர் ரோசையா கூறுகையில்,
சந்திரசேகரராவ் ஒரு சுயநலவாதி. அவர் கடந்த சில வாரங்களாக தெலுங்கானா மக்களை தூண்டி விடும் வகையில் அறிக்கை வெளியிட்டு வந்தார். மேலும் தெலுங்கானா மக்களிடம் சென்று கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வந்தார்.
மேலும் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்த சித்திப்பேட்டை பகுதியில் தொண்டர்களை பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்கள் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
இதனால் உண்ணாவிரத பந்தலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெட்ரோல் குண்டுகள், உருட்டுக்கட்டைகள், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்தனர்.
அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது அவர் மயக்கம் அடைந்தால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை கூட ஏற்படலாம். அப்போது அவரை போலீசாரால் கைது செய்வதிலும் சிக்கல் ஏற்படும்.
சந்திரசேகரராவ் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் அவரது உயிரை காக்க வேண்டியது ஆந்திர அரசின் கடமை. அதனால்தான் அவரை முன் எச்சரிக்கையாக கைது செய்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications