மதுரை சிறை கைதியை கொல்ல முயற்சி- போலீஸ் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்
மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது 20 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதல் நடத்தியது.
சிவகங்கையை சேர்ந்த வேல்முருகன் (35) கொலை முயற்சி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக இவரை இன்று காலையில் சிவகங்கை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு அவரை 2 போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
கரிமேடு காவல் நிலையம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த 20 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு வேல்முருகனை வெட்டியது.
தப்பியோடிய வேல்முருகனை ஓட ஓட விரட்டி அந்தக் கும்பல் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை காப்பாற்றி மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலைப் பிடித்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications