ஹைதராபாத் விமானத்துக்கு குண்டு மிரட்டல்-ஒருவர் கைது
டெல்லி: டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த இன்டிகோ நிறுவன விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து நேற்றிரவு 8.55 மணிக்கு 164 பயணிகளுடன் இந்த விமானம் கிளம்பத் தயாரானது. விமானம் கிளம்பவிருந்த நிலையில் அதில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் கால் சென்டருக்கு மிரட்டல் தொலைபேசி வந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை சிஆர்பிஎப் படையினர் சுற்றி வளைத்து பயணிகளை அவசரமாக இறக்கிவிட்டுவிட்டு விமானத்தை தனியாக ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று சோதனை நடத்தினர்.
ஆனால், அதில் குண்டு ஏதும் இல்லை.
இந்த தொலைபேசி அழைப்பு யமுனா விகார் பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு 22 வயதான முபாரக் என்ற நபரை கைது செய்தனர்.
இவரது உறவினர் ருஷ்மான் மாலிக் என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி இருந்தார். ஆனால், அவர் விமான நிலையம் செல்ல தாமதமானதால் விமானத்தை சில மணி நேரம் தாமதிக்க முபாரக் குண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
ருஷ்மான் மாலிக்கிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானம் முழுமையாக சோதனையிடப்பட்ட பின் நள்ளிரவு 12 மணிக்குக் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications