அரிசி, மணலோடு இப்போது அரசு இலவச கலர் டிவியும் கடத்தல்!
சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 17 இலவச அரசு கலர் டிவிகள் பிடிபட்டுள்ளன.
சென்னை கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து தமிழக அரசு வழங்கிய இலவச கலர் டிவிக்களை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் முரளி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான பால் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது பால் வேனில் தமிழக அரசு வழங்கிய 17 டிவிக்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் டிவிக்களை பறிமுதல் செய்ததோடு வேன் டிரைவர் ஆறுமுகம் (50) மற்றும் வேனில் இருந்த சிவக்குமார் (35) ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வண்ணாரப் பேட்டை, கொடுங்கையூர், தண்டை யார்பேட்டை பகுதியில் இலவச கலர் டிவிக்களை ரூ.1200க்கு வாங்கி பால் வேனில் ஆந்திராவுக்கு கொண்டு சென்று அங்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பது தெரியவந்தது.
அரிசிக் கடத்தல், மணல் கடத்தல் வரிசையில் இப்போது கலர் டிவி கடத்தலும் சேர்ந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது.