புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
புதுச்சேரி: அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரக் கோரி புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்து முறையிட நரிக்குறவர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சந்தைபுதுக்குப்பத்தில் 20 வருடங்களாக நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கலிதீர்த்தாள் குப்பத்தில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
தற்போது 23 குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். தற்போது பெய்த தொடர்மழையின் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதல்வர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்திக்க நேற்று காலை 6 மணியளவில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் முதல்வரை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறைக்கு சென்று சந்திக்குமாறு கூறினார். உடனே அவர்கள் அங்கிருந்து சட்டசபைக்கு சென்றனர். மதியம் 12 மணி வரை அங்கு காத்திருந்தனர். அதுவரை முதலமைச்சரை சந்திக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முதல்வரை சந்திக்க வந்து, பார்க்க முடியாமல் திரும்பிய நரிக்குறவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.